கொல்கத்தாவில் தோழர் ஜோதிபாசுவின் 109ஆவது பிறந்த நாள் விழா இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மிகவும் நெகிழ்வுடனும், எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள பிரமோத் தாஸ் குப்தா அரங்கில் ஜோதிபாசு சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா” என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“தோழர் ஜோதிபாசுவுக்கும் எனக்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் இணைப்பும் பிணைப்பும் இருந்தன. ஒருதடவை நான் அவரிடம், ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு பலம் எப்படி வருகிறது என்று கேட்டேன். அதற்கு அவர், ஒரு கம்யூனிஸ்ட் தான் நம்புகின்ற தத்துவத்தைப் புரிந்துகொள்வதிலும் அதனைத்தொடர்ந்து அதனை நம்புவதில் அவர் உறுதியாக இருப்பதிலும்தான் அதன் ரகசியம் இருக்கிறது என்றார்.
1930களில் நாம் போராடிக்கொண்டிருக்கும் சுதந்திரத்தின் குணாம்சங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று தொடர்பாக மூன்றுவிதமான தொலைநோக்குப் பார்வைகள் (visions), முன்னுக்கு வந்தன. காங்கிரஸ் கட்சி, ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைத்த அதே சமயத்தில், கம்யூனிஸ்ட்டுகள் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுடன் சோசலிசத்தையும் இணைத்து, நாட்டிலுள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் பொருளாதார சுதந்திரத்தையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்கள். மூன்றாவது தொலைநோக்குப் பார்வை என்பது ஜின்னாவும் சாவர்க்கரும் முன்வைத்த இரு நாடுகள் கொள்கையாகும்.
சாவர்க்கரின் இந்துத்துவா கொள்கைக்கும் இந்துயிசத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. இந்துத்துவா என்பது அவர்களின் ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரலாகும். எப்படி முஸ்லீம்களுக்கு மெக்கா-மெதினா ஒரு புனித நாடாகக் கருதப்படுகிறதோ, எப்படி கிறித்தவர்களுக்கு ஜெருசலம் ஒரு புனிதநாடாகக் கருதப்படுகிறதோ அதுபோல் இந்தியா, இந்துக்களுக்கு ஒரு புனித நாடாகக் கருதப்பட வேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும்.
சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டின் 1200 ஆண்டுகால அடிமைத்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறிய கருத்துகள் இதன் அடிப்படையில் அமைந்தவையே. அதாவது நம் நாட்டின் முதல் இஸ்லாமிய அரசமைப்புச்சட்டத்தையே அவர் குறிப்பிட்டு, அப்போதிருந்து அடிமைத்தனம் ஆரம்பமாகிவிட்டது என்கிறார். அதன் அடிப்படையில்தான் அவர்களின் இந்துத்துவா கொள்கை அமைந்திருக்கிறது.
இவ்வாறு மூன்று தொலைநோக்குப் பார்வைகளுக்கும் இடையேயான போராட்டம் இப்போதும் தொடர்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக நீடிக்க வேண்டுமா அல்லது இந்துத்துவவாதிகள் விரும்புவதுபோல் ஒரு பாசிஸ்ட் மதவெறி அடிப்படையிலான இந்து ராஷ்ட்ரமாக மாற்றப்பட வேண்டுமா என்பதற்கான போராட்டம் தொடர்கிறது.
இந்துத்துவா ஆட்சியாளர்கள் இப்போதைய அரசமைப்புச்சட்டத்தை அரித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான உண்மைகளைப் பேசுவதால் சமூகச் செயற்பாட்டாளரும், இதழாளருமான டீஸ்டா செடால்வத் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி, பொருளாதார இறையாண்மை, மதச்சார்பற்ற ஜனநாயகம் என்னும் நான்கு தூண்களின் மீது கட்டப்பட்டுள்ள நம் அரசமைப்புச்சட்டம் அரித்து வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கட்சியின் சமீபத்திய அகில இந்திய மாநாட்டின் அறைகூவலின்படி, பாஜகவினைத் தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அதிகபட்ச அளவில் அணிதிரட்டிட வேண்டும், அதன் மூலம் தற்போது இருந்து வரும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும். அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
ஜோதிபாசு சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம்
கொல்கத்தாவில் துவக்கப்பட்டுள்ள ஜோதிபாசு சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பணிகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலீம் அறிமுக உரை நிகழ்த்தினார். அப்போது அவர் எதிர்காலத்தில் இம்மையம் மேற்கொள்ள விருக்கும் பணிகள் குறித்தும் விளக்கினார்.
மேற்படி மையத்தின் தலைவரும், இடது முன்னணியின் தலைவருமான பிமன் போசு, நிகழ்வுகளுக்குத் தலைமை வகித்தார்.
இத்துடன் ஜோதிபாசு பிறந்தநாள் விழாவையொட்டி மாநிலம் முழுதும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்த தானம் அளித்தனர்.
நன்றி: நியூஸ்கிளிக்
(தமிழில்: ச.வீரமணி)